சோளகம்பட்டி ரயில் நிலையத்தை கடந்து செல்ல பாதை அமைக்க வலியுறுத்தல்
சோளகம்பட்டி ரயில் நிலையத்தைக் கடந்து செல்ல பாதை அமைக்க வேண்டும் என ரயில் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வெ. ஜீவகுமார் தலைமையில் தலைவர் அய்யனாபுரம் க. நடராஜன் உள்ளிட்டோர் அளித்த மனு:
தஞ்சாவூர் - திருச்சி ரயில்வே தடம் இரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இத்தடத்தில் சோளகம்பட்டி ரயில் நிலையத்தைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கடந்து செல்ல கேட் வசதி உள்ளது. சோளகம்பட்டி ரயில் நிலையத்தின் மையத்தில் நான்குபுறமும் ஏறத்தாழ 30 கிராமங்கள் உள்ளன. கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளும், இதர பிரிவு மக்களும் வசிக்கின்றனர்.
சோளகம்பட்டியில் ரயில்வே கேட் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, சோளகம்பட்டியில் தண்டவாளத்தின் கீழ் அல்லது மேல் பாதை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.