தஞ்சாவூர் அருகே வேகத்தடையில் சென்ற போது சைடு ஸ்டான்ட் தட்டி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவர், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி பழமானேரி சாலையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகோபால் (35). விவசாயி. இவர் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து பொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் திருக்காட்டுப்பள்ளி கடைத்தெருவுக்கு சென்றுள்ளார். இவரது வாகனம் திருக்காட்டுப்பள்ளி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகேயுள்ள வேகத்தடையில் சென்ற போது, எடுக்கப்படாத இவரது வாகனத்தின் சைடு ஸ்டான்ட் தட்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் ராஜகோபாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.