ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளதால் கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து முறையாக தண்ணீர் கிடைக்காததால், ஒரத்தநாடு, திருவோணம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சம்பா சாகுபடி முறையாக நடைப்பெறவில்லை. இதனால், மாற்று பயிராக பல்வேறு இடங்களில் உளுந்து, மக்காசோளம்,கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.அதிலும் ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் மார்கழி பட்டம் கடலையை பெருமளவிலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் அடுத்த நபர் ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே கடலை சாகுபடி செய்துள்ளனர்.அவை அனைத்தும் தற்போது முதல் களை கொத்தும் பருவத்திலும், விழுது இறங்கும் பருவத்திலும் உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக மழையில்லாததால், சுட்டெரிக்கும் வெயிலில் கடலைச் செடிகள் வாடி வதங்க தொடங்கின.
பல் வேறு இடங்களில் முதல் களை கொத்தினால் தண்ணீரின்றி செடி பட்டுவிடும் என எண்ணி, களை கொத்தாமல் விவசாயிகள் கவலையடைந்து இருந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக வியாழக்கிழமை ஒரத்தநாடு, திருவோணம் பகுதியில் மிதமான மழை பெய்த்தது. இதனால் கவலையோடு இருந்த கடலை விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.