கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோயில் ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோயில் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் இளைஞர் சடலம் கிடப்பதாக கும்பகோணம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற ரயில்வே போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்த நபர் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம், வடக்கு வீதியை சேர்ந்த கணேசன் மகன் கமாலுதீன் (35) என்பதும், கார்களை வாடகைக்கு விடும் தொழில் (டிராவல்ஸ்) செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த கார், தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் கமாலூதீன் சடலம் கிடந்துள்ளது.
கமாலுதீனின் தாய் விஜயா அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் ரயில்வே இருப்புப்பாதை போலீஸார் வழக்குப் பதிந்து, கமாலுதீனை யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் போட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.
கமாலுதீன் அப்பகுதியிலுள்ள முஸ்லிம் பெண்ணை காதலித்ததால், கமல்ராஜ் என்ற பெயரை கமாலுதீன் என சில நாள்களுக்கு முன்பு மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.