தமிழக அரசு காவலர்களுக்கு மருத்துவப்படி உயர்த்தி வழங்க ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிச்சைபிள்ளை, லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18,000 ஆகவும், ஓய்வூதியம் ரூ. 9,000 என மாற்றியமைக்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல், மாநில அரசும் மருத்துவப் படியாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.
காவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 3வது ஊதியக்குழுவில் சமமாக இருந்த ஊதியம் 4 வது ஊதியகுழுவில் குறைக்கப்பட்டதை மாற்றியமைக்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50ஆயிரத்தை ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அமைப்புச் செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ஜார்ஜ் நெல்சன், செயலாளர் பத்மநாபன் ஆகியோர் பேசினர். முன்னதாக, துணைத் தலைவர் அப்துல்காதர் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.