தஞ்சாவூர் அருகே குடிநீர் வராதால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதி வடக்குப்பட்டு கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் குடிநீருக்காக நான்கு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் ஆழ்குழாயில் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டதாலும், குழாயில் அடைப்பு உள்ளதாலும் தண்ணீர் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பல முறை முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நாஞ்சிக்கோட்டை - மருங்குளம் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வல்லம் போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.