காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நீங்க வேண்டி கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்து கூட்டு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சி நீங்கி தேவையான அளவிற்கு பருவமழை பெய்ய வேண்டி மூலவர் மற்றும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு கோதுமை, அரிசி, துவரை, பச்சை பயறு, கொண்டக்கடலை, வெள்ளை மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய 9 வகையான நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர். மேலும், தொடர்ந்து 5 மணி நேரம் அகண்ட ராமநாம பாராயணம், வருண ஜெபம், நாம சங்கீர்த்தனம், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.