தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதை கண்டித்து, காவிரி விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாயிகள் மரபணு மாற்று விதைகளை பயன்படுத்த கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், 60 வயது கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, கன்னியாகுமரி முதல் சென்னை வரை 100 நாள்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்பயணத்தில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கி விமர்சித்து பேசி வந்தார்.
திருச்செந்தூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவி நெல்லையம்மாள் துண்டு பிரசுரம் வழங்கியதை தடுத்ததோடு, அய்யாக்கண்ணுவை தாக்கினார். இது கண்டிக்கத்தக்கது. அய்யாக்கண்ணுவைத் தாக்கிய பாஜகவின் மகளிரணித் தலைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், நெல்லையம்மாளின் செயலை பாராட்டிய தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், நெல்லையம்மாளை கண்டிப்பதுடன், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த திரளான விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.