பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள காசாங்குளம் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களில் பலர் குப்பைகளையும், பூமாலை கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இந்த குளத்தில் போட்டுச் செல்வது வாடிக்கையாகி விட்டது.
இதேபோல, இந்த குளத்தின் கரையோரங்களில் இரவு நேரத்தில் மது அருந்தும் சிலர் மது அருந்தி விட்டு காலி மதுபான பாட்டில்களை குளத்து நீரில் வீசிச் செல்கின்றனர். இதனால் காசாங்குளம் நீர் மாசடைந்து நாளுக்கு நாள் அசுத்தமாகி வருகிறது.
இதையடுத்து, பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை சார்பில்
காசாங்குளத்தின் கரையோர நீரில் மிதக்கும் கழிவுகளை அகற்றி தூய்மை செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.பிரபு, திமுக பேச்சாளர் ந.மணிமுத்து, பொறியாளர் ஆனந்த், டைல்ஸ் விற்பனைக்கடை உரிமையாளர் மகேந்திரன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று காசாங்குளத்தின் கரையோர நீரில் மிதந்து கொண்டிருந்த கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.