தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஆர்யா பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கும்பகோணத்தில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதி முன் பெண்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ள நடிகர் ஆர்யா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் பல்வேறு போட்டிகளில் வெல்லும் ஒரு பெண்ணை மணந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சி மூலம் பெண்களை நடிகர் ஆர்யா இழிவுபடுத்துவதாகவும், கலாசாரத்தை சீரழிப்பதாகவும் கூறி துர்கா மாதர் சங்கத்தின் தலைவர் ராசாத்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், கும்பகோணம் கல்லூரி சாலையில் நடிகர் ஆர்யா தங்கியிருந்த தனியார் விடுதி முன் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதன்பின்னர், நடிகர் ஆர்யா கும்பகோணம் அருகே குடவாசல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார்.