கும்பகோணம் சரகத்தில் உள்ள 87 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கும்பகோணம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளருமான மாரீஸ்வரன் கூறியது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு ஊழியர் சிக்கனம் மற்றும் கடன் சங்கம், கூட்டுறவு நகர வங்கி, ஊரக வேளாண்மை வளர்ச்சி வங்கி, பிரதம கூட்டுறவு பண்டகசாலை ஆகிய பெயர்களில் உள்ள 87 சங்கங்களுக்கு வரும் ஏப். 2 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு சங்கத்துக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெறும். ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா 11 இயக்குநர்கள் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட உள்ளது.
இதற்கான வேட்புமனு அந்தந்த சங்க தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வரும் 26 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்ட பிறகு தலைவர், துணை தலைவர் தேர்தல் தனியாக நடைபெறும். அதன் பின்னர், நிர்வாகிகள் பொறுப்பேற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள் என்றார்.
அப்போது கூட்டுறவு சார் பதிவாளர் பன்னீர்செல்வம் உடனிருந்தார்.