தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி இறந்த கும்பகோணம் இளம்பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி -சாந்தி தம்பதியின் ஒரே மகள் அகிலா (24). இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றத்துக்காக சென்றவர், அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
தகவலறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், திமுக நகர செயலாளர் சுப. தமிழழகன், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொது செயலாளர் டி. குருமூர்த்தி, பாமக நிர்வாகி பாலகுரு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி குடந்தை தமிழினி உள்ளிட்ட ஏராளமானோர், அகிலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை அகிலாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெருமாண்டி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.