அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அம்மை, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்த மூலிகை கலந்த நீர் மோர் வழங்குவதற்குக் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தொழிலாளர்களின் உடல் நலனை பாதுகாக்கும் விதமாகக் கோடைகாலத்தில் அதிகமாகத் தாக்கப்படும் மஞ்சள் காமாலை, அம்மை உள்ளிட்ட நோய்களுடன் கண் எரிச்சல், உடல் வெப்பத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக கும்பகோணம், நாகை மண்டலப் பொது மேலாளர் அறிவுறுத்தலின் பேரில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நெல்லிக்காய், மிளகு, சீரகம், இஞ்சி சாறு உள்ளிட்ட மூலிகைகள் கலந்த மோர் தஞ்சாவூரில் உள்ள நகர, புறநகர் கிளைகளில் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இதேபோல, கும்பகோணம், நாகை மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மூலிகை நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இது, உடலின் வெப்பம், நோய்கள் தடுப்பதுடன் உற்சாகம் அளிப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.