கோயில் இடத்தை அளக்கச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

திருநாகேஸ்வரத்தில் கோயில் இடத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து, பொதுமக்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநாகேஸ்வரத்தில் கோயில் இடத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து, பொதுமக்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நன்செய்,   புன்செய் நிலங்கள், குடியிருப்புகள், வீட்டு மனைகளை அளந்து வகைப்படுத்த வேண்டுமென அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து கோயில்களின் இடங்களும் தற்போது அளவீடு செய்யப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் ராகு தலமான  திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான மணல்மேட்டு தெரு மனை பகுதியில் 40 பேர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்த இடத்தை அளவீடு செய்ய கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறநிலைய துறை பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி, இது தங்களது பட்டா நிலம்;  கோயில் இடமில்லை. எனவே, அளவீடு செய்யக் கூடாது எனக் கூறியுள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து சென்றபோது,  திடீரென சிலர் தங்களது மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அளவீடு செய்யாமல் பாதியிலேயே திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com