ஒரத்தநாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற மார்க்சிஸ்ட் நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (63). இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்க ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரும் இவரது மகன் தயாநிதி(33) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரத்தநாட்டிற்கு சென்றனர். அங்கு அண்ணாசிலை அருகே சில நபர்கள் பாதையில் நின்றுக் கொண்டிருந்தார்களாம். அப்போது, தயாநிதி தனது இருசக்கர வாகனத்தில் இருந்தவாறு ஒலி ( ஹாரன்) எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த நபர்கள் மோகன்தாஸ், தயாநிதியை தாக்கினார்களாம். பலத்த காயமடைந்த இருவரும் ஒரத்தநாடு அரசு மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மோகன்தாஸ் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.