துத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து நரிக்குறவர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏழுமாந்திடல் நரிக்குறவர் சங்கத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரை தமிழக அரசு கொன்றுள்ளது. இதில் 17 வயது சிறுமியும் ஒருவர். 100 நாள்களாக போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான், ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முனைந்தனர். அதற்காக அவர்களை சுட்டுக் கொன்றது ஜனநாயகப் படுகொலை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வலியுறுத்தப்பட்டது.
இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும், தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை நிர்வாகி மனோகர், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகத், சங்கத்தமிழன், நரிக்குறவ மக்கள் பலர் பங்கேற்றனர்.