பட்டுக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; இதனால், பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஒரத்தநாடு வட்டம், வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட நடுவிக்கோட்டை, அலிவலம், உதயசூரியபுரம், கொண்டிக்குளம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
இதனால், மின்விபத்து ஏற்படாமல் இருக்க இப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்கள் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இரவு நேரம் வந்ததால், மரங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை .
இதனால் பல்வேறு கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.