பாபநாசம் அருகே புதன்கிழமை டிராக்டர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அய்யம்பேட்டை காவல் சரகம், புதுமாத்தூர், லிங்கத்தடிமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அந்த பகுதியில் வாகன சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனாத்தி லட்டபால் (25). இவர் புதன்கிழமை தனது கணவர் நடத்தி வரும் வாகன சர்வீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
இவர் தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையில் பசுபதிகோவில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மீனாத்தி லட்டபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.