இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் கும்பகோணம் சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சுந்தரபெருமாள் கோவில் கிளை செயலாளர் காசிநாதன் தலைமை வகித்தார். கும்பகோணம் வட்டக்கிளை செயலாளர் தயாநிதி, தலைவர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், அலுவலர் குழு பரிந்துரைகள் மீதான அரசாணையின்படி பணப்பலன்கனை 1.1.2016 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும், 21 மாத ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ படியை மாதந்தோறும் ரூ. 1,000 ஆக வழங்க வேண்டும், 12.5.2017 தேதியிட்ட மத்திய அரசின் ஆணையின்படி முழுமையான ஓய்வூதிய பலன்கள் 1.1.2016 முதல் திருத்தி அமைத்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
ஒரத்தநாட்டில்... வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். ஆதார கிளை சங்கத்தின் தலைவர் ஒக்கநாடு கீழையூர் பவானந்தம், மருங்குளம் பன்னீர்செல்வம், பொருளாளர் வாண்டையார் இருப்பு சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒக்கநாடு கீழையூர், மருங்குளம் , வாண்டையார் இருப்பு ஆகிய 3 கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.