தஞ்சாவூர் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் கருவிகள், வாடமை மையம் அமைக்கும் திட்டம் ரூ.7.82 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018-19ஆம் நிதியாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் மாவட்டத்தில் ரூ.7.82 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில், 8 முதல் 70 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர்டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், துகளாக்கும் கருவி, மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் போன்ற வேளாண் இயந்திரங்கள், கருவிகள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மானிய விலையில் வாங்கிப் பயன் பெறலாம்.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு விவசாயிகள் முதலில் உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். இதன்பின், விண்ணப்பம் மத்திய அரசின் agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.