தஞ்சாவூர் மாநகரில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் இப்பேரவையின் அக்டோபர் மாதக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மர்ம காய்ச்சல் பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது சுகாதாரத்தையும், புதை சாக்கடைகள் ஆங்காங்கே சாலையில் ஓடுவதையும், குப்பைகள் குவிந்து காணப்படுவதையும் அறிந்து, அவற்றை அகற்ற உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பல கிராமங்களில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளின் மின் மோட்டார்கள் இயங்காததால் அவை செயல்படாமல் மக்கள் குடிநீருக்குக் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் தலைவர் அர. தங்கராசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெ. பழனியப்பன், செயலர் மா. பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பி. பன்னீர்செல்வம், ஏ. பிச்சை பிள்ளை, சட்ட ஆலோசகர் வெ. ஜீவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.