சபரிமலை வழிபாட்டில் பழைய நடைமுறையைத் தொடர வலியுறுத்தி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கட்சியின் தஞ்சை மண்டல தலைமை ஒருங்கிணைப்பாளர் இரா. ரவி தலைமையில் மாவட்ட பொதுச்செயலர் கே. பாலா முன்னிலையில் இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல் செய்ய கும்பகோணம் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள், சபரிமலையில் பெண்கள் நுழைவு விவகாரத்தில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதற்காக மத்திய, கேரள மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும், சபரிமலைக்கு வேண்டுமென்றே செல்வோர் இந்து பெண்கள் அல்ல; அவர்கள் அனைவரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களே.
அப்படி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இவர்களில் 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாலை மறியல்... மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலர் டி. குருமூர்த்தி தலைமையில் நகர செயலர் பூக்கடை பாலாஜி, மாவட்டத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட கட்சியினர் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இந்து மதத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே சபரிமலையில் ஏறிய பெண்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சபரிமலைக்கு சென்ற இஸ்லாமிய பெண்ணுக்கு துணை நின்ற போலீஸார், அவருக்கு போலீஸ் சீருடை வழங்கிய உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழங்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.