தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவர்களுக்குள் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் விசைப்படகு சிறைப்பிடிக்கப்பட்டது.
பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்குச் இவருக்கு சொந்தமான விசைப் படகில் இதே பகுதியைச் சேர்ந்த சங்கர், மூர்த்தி, கோட்டைச்சாமி, ஆறுமுகம் ஆகிய மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், தங்களின் வலைகளை அறுத்ததாகவும் கூறி அருகில் உள்ள கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காளீஸ்வரன், பிரகாஷ், பாலமுருகன், வைரமூர்த்தி, கார்த்திக், பாரதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் 3 நாட்டுப் படகுகளில் சென்று விசைப்படகு மீனவர்களைத் தாக்கி, விசைப்படகை சிறைப்பிடித்து கரைக்கு கொண்டு வந்து கடலோரக் காவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மோதலில் காயமடைந்த விசைப்படகு மீனவர்கள் சங்கர், மூர்த்தி ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் நிலையத்தில் விசைப்படகு உரிமையாளர் ஜியாவுதீன் அளித்த புகாரில் தனது விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்களையும் தாக்கி, படகிலிருந்த மீன்களையும் திருடிச் சென்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.