தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் செப். 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
சட்டப்பேரவையில் 2018 - 19 ஆண்டுக்கான வருவாய்த் துறை மானிய கோரிக்கையின்போது 24 சேவைகள் இணையவழி மூலம் வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக வெடிபொருள் சில்லறை விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் கணினி இணையவழி மூலமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு வெடிபொருள் விதிகள் 2008-படி உரிய ஆவணங்களுடன் செப். 28-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக். 20-ம் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும். செப். 28-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.