மரக்காணம் அருகே மாந்தோப்புக்கு காவலுக்குச் சென்ற காவலாளி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யமூர்த்தி(35). இவர், மரக்காணம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்ற சூர்யமூர்த்தி காலை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில், குரும்புரம் பேருந்து நிறுத்தம் அருகே திண்டிவனம் சாலையில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.