விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், கடந்தாண்டு வெளி நோயாளியாக 9 லட்சம் பேரும், உள் நோயாளியாக 81 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், தோல் சிகிச்சை, சிறுநீரகம், நுரையீரல், காசநோய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதய நோய், ரத்தம் சுத்திகரிப்பு, புற்றுநோய், உடல் ஒட்டுறுப்பு, குடல் அறுவை போன்ற உயர் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரியில் இதுவரை 350 மாணவர்கள் மருத்துவம் முடித்துச் சென்றுள்ளனர். துணை மருத்துவப் படிப்புகளாக, பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். உயிரி வேதியியல் துறைத் தலைவர் பூங்குழலி கோபிநாத் வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ.எஸ்.ராஜேந்திரன், நிலைய மருத்துவ அலுவலர் கே.புகழேந்தி, துணை முதல்வர் எ.சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 105 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மருத்துவப் படிப்பு, மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அரசு மருத்துவக் கல்லூரியில் அரிய வாய்ப்பை பயன்படுத்தி மருத்துவம் முடித்துள்ள நீங்கள், கிராமப்புறங்களில் மருத்துவப்பணி மேற்கொள்ள முன்வர வேண்டும். கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றி பெருமை கொள்ளச் செய்ய வேண்டும். மருத்துவ மேற்படிப்புகளைத் தொடர்ந்து, சிறந்த மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து, மருத்துவப் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில், துறைத் தலைவர்கள் வெங்கடேஸ்வரி, சுபசித்ரா, பரிமளா, டெலிபுளோ, ராஜராஜன், சிந்துஜா, ராஜாராமன், ரவிக்குமார், அறிவழகன், நிர்வாக அலுவலர்கள் எம்.ஆர்.சிங்காரம், ஆனந்தஜோதி, சதீஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.