பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் நகைக்காக சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டார்.
பண்ருட்டியை அடுத்துள்ள ஆர்.எஸ்.மணி நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுலைமான். பண்ருட்டியில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காதர்பாஷா மகள் யாஸ்மின் (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
சுலைமான் வேலைக்குச் சென்றதும் யாஸ்மின் வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பாராம். சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாஸ்மினின் தாய் பர்வீன் தனது மகளை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தொடர்புகொள்ள முடியாததால் மகள் யாஸ்மின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, கதவுகள் திறந்த நிலையில் இருந்தனவாம். உள்ளே சென்று பார்த்தபோது யாஸ்மின் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.