விருத்தாசலம் அருகே மாட்டு வண்டி மீது பேருந்து மோதியதில் 18 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.
பொள்ளாச்சியிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து சனிக்கிழமை அதிகாலையில் விருத்தாசலம் புறவழிச் சாலை வழியாகச் சென்றது. அப்போது சாலையில் திடீரென மாட்டுவண்டி குறுக்கிட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மாட்டு வண்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்திலிருந்த பயணிகள் 17 பேரும், மாட்டு வண்டியை ஓட்டிவந்த கலியபெருமாள் (65) என்பவரும் பலத்த காயமடைந்தனர். விபத்தில் மாடுகளும் காயமடைந்தன.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயம்பட்ட மாடுகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து தொடர்பாக விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.