அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட பணப்பாக்கம், சின்னப்பேட்டை, திருத்துறையூர், எனதிரிமங்கலம், அவியனூர், பி.என்.பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், "முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனிநபர் கழிப்பறைகள், கழிவு நீர் உறிஞ்சுக்குழிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, செப்.20-ஆம் தேதிக்குள் ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 15,313 கழிப்பறை பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, அங்கன்வாடி மையம் கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, தாய் திட்டத்தின் கீழ் நடைபெறும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் கூறினார்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, க.சதீஷ்குமார், உதவிப் பொறியாளர்கள் ஜெய்சங்கர், ரத்தினகுமார், தமிமுனிசா, பணி மேற்பார்வையாளர்கள் அலமேலு, ஞானசேகரன், சத்தியநாராயணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, விஜயலட்சுமி, சிவப்பிரகாசம், கணேசன், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.