சிறு தொழில் தொடங்க மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவியைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கிட 25 விழுக்காடு அரசு மானியத்துடன் சிறுதொழில் கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இணையதளம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசானது சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்ற, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் உற்பத்தி, சேவை, வியாபார நிறுவனங்கள் தொடங்கிட ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராகவும், அதிகபட்சம் பொதுப் பிரிவினருக்கு 35 வயதும், மற்றவர்களுக்கு 45 வயது வரையிலும் வரையறை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு 158 நபர்களுக்கு ரூ.78.77 லட்சம் மானியம் வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இணையதள முகவரியில் பதிவுசெய்து, அதன் இரு நகல்களை உரிய இணைப்புகளுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழில்பேட்டை, செம்மண்டலம், கடலூர் என்ற முகவரியில் நேரடியாக வழங்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.