போலீஸாரைக் கண்டித்து, தே.புடையூரில் கிராம மக்கள் கருப்புக் கொடியுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பூரை அடுத்துள்ள தே.புடையூர் கிராமத்தில் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் தே.புடையூர் கிராமத்தினர் 4 பேர் மீது வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அப்பகுதியினர் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்துக்கு சென்று கேட்டபோது சிலர் காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து விருத்தாசலம்-ú சலம் மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மறியல் தொடர்பாக வேப்பூர் காவல் துறையினர் 20 பேர் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர். இதனையறிந்த கிராம மக்கள் சனிக்கிழமை தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும், கருப்புக் கொடியை கைகளில் ஏந்தியவாறு அப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவக் கழிவு தொழிற்சாலை பிரச்னை தொடர்பான கிராமத்தினர் மீது பதிவு செய்த வழக்கை போலீஸார் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.