மங்கலம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காவல் துறை ஏற்பாட்டில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். மங்கலம்பேட்டையில் வருகிற 29-ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மங்கலம்பேட்டை காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு, காவல்நிலைய ஆய்வாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விநாயகர் சிலை ஊர்வலக் குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதில், ஏற்கெனவே வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலத்தை அனுமதிப்பது, பிற சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான கோஷங்களை தவிர்ப்பது, ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துவது, சிலை பாதுகாப்புக்குழு அமைத்து குழுவினர் காவல் காப்பது, கலவர நோக்குடன் செயல்படுவோரை கைது செய்வது ஆகிய வழிமுறைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
கூட்டத்தில் , அதிமுக நகர அவைத் தலைவர் அப்பாதுரை, இந்து முன்னணி பிரமுகர் கமலக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர்கள் சையது முகமது, அபுபக்கர், திமுக ஒன்றிய பிரதிநிதி குழந்தைசுதந்திரன், அகில பாரத இந்து மகா சபா மாநில நிர்வாகி பெரி.செந்தில், பாஜக விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் மணிகண்டன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலர் இக்பால், பாமக பிரமுகர் கிருட்டிணமூர்த்தி, வணிகர் சங்க பிரமுகர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி ஆய்வாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.