காலை அமுக்கி விடுமாறு யாரையும் தான் பணிக்கவில்லை என விருத்தாசலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மணிமுக்தா ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை பார்வையிட்ட வி.டி.கலைச்செல்வன், பின்பு ஆற்றோரத்தில் உள்ள ஆற்றுப் பிள்ளையார் கோயிலில் இளைப்பாறினார்.
அப்போது அவருடன் வந்த சிலர் அவருக்கு விசிறியதோடு, அவரது கால்களையும் அமுக்கிவிட்டனர். இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக கலைச்செல்வன் திங்கள்கிழமைகூறியதாவது: ஆற்றை தூய்மைப் படுத்தும் பணியை 3 கி.மீ. தூரம் மணலில் நடந்து சென்று பார்வையிட்டேன். மேலும் 70 அடி உயரத்தில் உள்ள ஆற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு ஏறிவரும் படித்துறையும் செங்குத்தாக இருந்ததால் சற்று சிரமத்துடன் ஏறிவந்தேன்.
இதனால் எனக்கு மூச்சு வாங்கியதோடு, களைப்பாகவும் இருந்தது. இளைப்பாறும் போது என்மீது கொண்ட பற்று காரணமாக சிலர் எனக்கு உதவினரே தவிர, நான் யாரையும் பணிக்கவில்லை என்றார்.