வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1-12-2018-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியடைபவர்களை வாக்காளர்களாக சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெற்று வந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்டாலோ அல்லது இறந்திருந்தாலோ அவர்களின் பெயர்களை நீக்கிடவும், வாக்காளர்களின் பெயர், உறவினர் பெயர், முகவரி மற்றும் வயதுகளில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை திருத்திடவும், இதர கோரிக்கைகள் தொடர்பாகவும் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில், உரிமை கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 15-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் 15-ஆம் தேதியன்று வீடு, வீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற உள்ளனர். எனவே, பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.