ஆழிச்சுக்குடியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே உள்ள ஆழிச்சுக்குடியில் உள்ள சாலையானது அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்தது. இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் மழையால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இந்தப் பாதையும் மழையால் பாதிக்கப்பட்டு சேறும் சகதியுமாக மாறி விட்டது.
இந்தச் சாலையை இருசக்கர வாகனம் மூலமாக கடக்க முற்பட்டால் கீழே விழுந்து காயமடைய நேரிடும் வாய்ப்பே அதிகம் உள்ளது. மேலும், 4 சக்கர வாகனங்களும் மிகுந்த சிரமத்துக்கிடையே இந்தப் பாதையை கடக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பாதையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் இயத்தினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் கு.முருகானந்தம் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆழிச்சுகுடி பகுதிச் செயலர் ம.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.