பைக் திருட்டு தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ச.தெய்வகுமார் (38). கடந்த மாதம் 18-ஆம் தேதி இவரது இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், புதன்கிழமை தெய்வ
குமார் விருத்தாசலம் சரோஜினி நகரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது பைக்கை மற்றொரு நபர் ஓட்டிச் செல்வதைப் பார்த்துள்ளார். உடனடியாக, அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தார். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் புஷ்பராஜ், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சுரேஷ் என்ற மிட்டாய் சுரேஷ் (29) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் பைக்கை மீட்டனர்.