திட்டக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அசனாம்பிகா உடனுறை ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலில், கார்த்திகை பெண்கள் பிரகாரக் குழுவினர் சார்பில் மகாபிஷேகம், கலசாபிஷேகப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காலையில் விக்னேஷ்வர பூஜையுடன் நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து, 2-ஆம் கால பஞ்சவிம்சதி கலசபூஜை நடைபெற்றது. இதையடுத்து பூஜைப் பொருள்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளானோர் கலந்துகொண்டு 135 திரவிய குடங்களை சுமந்தும், நவ தானியங்கள் அடங்கிய 30 தாம்பூலங்களை தாங்கியும் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மஹா பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன.
அசனாம்பிகா உடனுறை ஸ்ரீவைத்தியநாத சுவாமி மூர்த்தி சாந்தி பெறவும், திட்டக்குடி வாழ் மக்கள், உலக மக்கள் அமைதியுடன் வாழவும் பெண்கள் வழிபாடு செய்தனர். பின்னர், கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், செயல் அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன், தக்கார் இரா.பழனியம்மாள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.