கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஆன்லைன் சான்றுகள் வழங்கும் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், ஆன்லைன் சான்றுகள் மற்றும் பட்டாமாறுதல் பரிந்துரை செய்வதற்கான செலவினத்தொகையை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து வழங்கவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும். வெளி மாவட்டங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் வகையில் அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆட்சியரை சந்தித்த பின்னர் ரவி கூறுகையில், எங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வியாழக்கிழமை (டிச.14) முதல் ஆன்லைன் மூலம் சான்றுகள் வழங்கும் பணிகளை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சுரேஷ், ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.