தமிழகத்தை பாஜக புறவாசல் வழியாக ஆள்கிறது என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றம் சாட்டியது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பி.ஜைனுல் ஆபிதீன், மாநிலத் தலைவர் எம்.ஐ.சுலைமான், மாநிலச் செயலர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர், மாநில தலைவர், செயலர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் விலை பேசப்பட்டுவிட்டனர். பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறியவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தமிழகத்தை பாஜக புறவாசல் வழியாக ஆள்கிறது. மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது முஸ்லிம் விரோதப் போக்கினை காட்டுவதாக உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை.
தீவிரவாதத்தை எந்தவிதத்திலும் நாங்கள் ஆதரிக்கவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தீவிரவாதம் ஊடுருவி விட்டதாகக் கூறுகிறார். மத்திய, மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாம் மதத்தில் இணைபவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும் அரசாணையை அமல்படுத்தி சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.