பணி நாள்கள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4-ஆவது நாளாகப் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஜூலை 17) சுரங்கம் 1-ஏ வாயில் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
நெய்வேலியில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை வழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
சுரங்கம் 1-ஏ எஸ்எம்டி பகுதியில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நாள்களை மாதத்துக்கு 19 நாள்களாக என்எல்சி நிர்வாகம் குறைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டமும், சனிக்கிழமை அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் எச்சரிக்கைப் பேரணியும் நடைபெற்றது. பின்னர் முக்கிய நிர்வாகிகள் என்எல்சி தலைமை அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திங்கள்கிழமை (ஜூலை 17) காலை சுரங்கம் 1-ஏவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது நாளாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.