பண்ருட்டி அருகே வியாபாரியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த 2 பேரைப் பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (60). இவர், அதே பகுதியில் கோழிக்கறிக் கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு முடப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் வழி கேட்பது போல் நடித்து, வெங்கடேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தைப் பறித்து தப்பிச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தப்பிச் சென்ற இருவரையும் மடக்கிப் பிடித்து, முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (24), சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்த
ஜெயபிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.