திட்டக்குடி அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் சேதமடைந்தன.
திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி ஜெகதாம்பாள். திங்கள்கிழமை மதியம் மின் கசிவு காரணமாக இவரது வீடு தீப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள ராசாத்தி என்பவரின் வீட்டுக்கும் தீ பரவியது.
தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு - மீட்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்தத் தீ விபத்தில் இரண்டு வீடுகளிலும் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
திட்டக்குடி வட்டாட்சியர் செ.செல்வியம்மாள், வருவாய் ஆய்வாளர் செல்வலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி சேத மதிப்பை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் பணம், அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
விபத்து குறித்து திட்டக்குடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.