வீட்டுமனை கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் பேச்சுவார்த்தை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் ஒன்றியம், கீழ்அழிஞ்சிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட செங்காட்டு காலனியைச் சேர்ந்த 150 தலித் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, போராடி வருகின்றனர்.
நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தடையை நீக்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, ஜூலை 21- ஆம் தேதி கடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் மதிவாணன் தலைமையில் திங்கள்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிலம் தொடர்பான தடை உத்தரவு வழக்கில் தீர்ப்பு வந்தபின்னர், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.