கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் என்.பரிமளா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் பி.சுகந்தி, மாவட்டச் செயலர் வி.மேரி, மாவட்டத் தலைவர் பி.தேன்மொழி, பொருளாளர் ஆர்.சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் கே.அன்புசெல்வி, பி.ஜூலியட்ஜெனிட்டா, எஸ்.மரியலில்லி, எஸ்.புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனை நிர்வாகச் சீர்கேட்டைச் சரி செய்ய வேண்டும். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அலைக்கழித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதை நிறுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்க்க போதுமான பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் மருத்துவம் பார்ப்பதற்குக் கூடுதல் மருத்துவர்களை நியமித்து தரமான பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.