பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாள்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டிக்கான ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார். பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், உற்சவதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் மாலை நேரத்தில் பெரிய நாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலிப்பார். ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 25-ஆம் தேதி நடைபெறுகிறது.