பண்ருட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவனப் பொறியாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, சடையப்பன் தெருவில் வசிப்பவர் ரங்கநாதன். இவரது மகன் கலியபெருமாள் (45). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவர், புதன்கிழமை காலை 6 மணிஅளவில் தனது பைக்கில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பணிக்கன்குப்பம் நோக்கிச் சென்றார். பண்ருட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராக விதமாக பைக் மீது மோதியது. இதில், கலியபெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காடாம்புலியூர் போலீஸார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.