கடலூரில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே உள்ள கேப்பர்மலை பகுதியில் பெரிய அளவிலான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கடலூர் நகருக்கான குடிநீர் குழாய்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில், கே.என்.பேட்டை பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
உடைப்புப் பகுதியிலிருந்து பீறிட்ட குடிநீர் அப்பகுதி முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி வீணாகியது.
இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலைத் தொடர்ந்து கடலூர் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
உடைப்பு சரிசெய்யப்பட்டு மீண்டும் நீரேற்றப்பட்டு பரிசோதனைக்குப் பிறகே குடிநீர் வழங்க முடியும் என்பதால், மேலும் சில நாள்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் தட்டுப்பாடு
ஏற்படுமென நகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.