கடலூர் கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கெடிலம் ஆற்றங்கரையின் வழியாக கம்மியம்பேட்டைக்குச் செல்லும் புறவழிச் சாலை உள்ளது. இந்தச் சாலையை தற்போது சென்னை, புதுச்சேரிக்குச் செல்லும் வாகனங்கள் புறவழிச் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு கடலூரில் பெய்த பெருமழையால் இந்தச் சாலை சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர், கட்சியினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டில் ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்பட்டது. ஆனால் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் சாலை மோசமாக சேதமடைந்தது.
எனவே, இந்தச் சாலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றதாகவும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும் கடலூரிலுள்ள அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு கைதாகினர். அதனைத் தொடர்ந்து சார் - ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் சாலையை சீரமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாள்களாக சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலையிலுள்ள பள்ளங்களை மணல், ஜல்லிகளை கொண்டு நிரப்பியும், சில இடங்களில் புதிதாக சாலை அமைத்தும் செப்பணிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இப்பணியை செய்யாமல் சாலை முழுமைக்கும் சீரமைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டுமென பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.