நெய்வேலியில் இளம் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்துவது குறித்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம், 26-ஆவது வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வருகிற ஜூலை 9, 23 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட, நெய்வேலி நகரில் உள்ள 72 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்கு ஆயத்தமாக, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி விளக்க வகுப்பு, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
நெய்வேலி தொகுதி தேர்தல் பொறுப்பு அலுவலர் நெடுமாறன் தலைமை வகித்தார். வாக்குச் சாவடி நிலை அலுவலர் மணிமாறன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளின் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் உதயகுமார் பேசுகையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் என்எல்சி நிறுவனம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களில் பல்வேறு வகையில் உதவியதன் விளைவாக, நெய்வேலி நகரில் 20 சதவீத வாக்குப் பதிவு அதிகமானது. அதற்கு என்எல்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்துப் பணிகளையும் உரிய நேரத்தில் செய்துமுடிக்க வேண்டும் என்றார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் தேவநாதன், வாக்குச் சாவடி நிலை அலுவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறியாளர் வீரப்பன் நன்றி கூறினார்.