சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களை கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் துரை.கி.சரவணன் சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் சட்டப் பேரவையில் பேசியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வதில் பாரபட்சம், குளறுபடிகள் உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 6 ஆயிரம் பேர் அயற்பணியிட மாற்ற செய்யப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அயற்பணியிட மாற்றத்தைக் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். கடைநிலை ஊழியர்களை வெகு தொலைவுக்கு மாற்றம் செய்வதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரிய சிரமமாக உள்ளது.
மேலும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. 2012-ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தொகுப்பூதியர்களின் பணி வரன்முறை செய்யப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.10.45 கோடி வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமமான நிலையே உள்ளது.
எனவே, பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கியும், நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பரிந்துரைகளை அமல்படுத்தியும் பல்கலைக்கழகத்தை காத்திட வேண்டும் என்றார் அவர்.